இக்காலத்தின் கடைசி கவிதை…

நவம்பர் 30, 2009 by கவிகுரல்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என்னை பொருத்தாருக்கு நன்றி
பொருமை காத்தோருக்கும் நன்றி
என் கவிதை ரசித்தோருக்கு நன்றி
ரசித்து பாராட்டியோருக்கும் நன்றி
எழுத்தை படித்தோருக்கு நன்றி
படித்து புரிந்தோருக்கும் நன்றி
துணைக்கு வந்தோருக்கு நன்றி
துணையாக வந்தோருக்கும் நன்றி
சேதி சொன்ன கவிதைக்கு நன்றி
கவிதையான சேதிக்கும் நன்றி
முதலில் எழுதிய கவிதைக்கு நன்றி
முடிவானதால் இக்கவிதைக்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இனி உன்னோடுதான்…

நவம்பர் 29, 2009 by கவிகுரல்

கல்லூரியில் காலடியின் முதல் நாள்
ஹாய் ஹலோ சொன்னது முதல்
கசக்காத நினைவுகள் கண்முன்னே
இன்றும் தோற்றப்பிழையில்லாமல்
தோள்கொடுத்த தெய்வங்களுடன்…

யாருக்குத்தெரியும் நாமிணைவோம்
சொர்க்கம்வரை சுற்றி திரிவோமென
கடவுள் சொல்லவில்லை என்
நிகழ்காலமும் எதிர்காலமும் ஏன்
முடிவுகளும் இனி உன்னோடுதானென்று…

”வந்துட்டாண்டா ஊர் நாட்டான்” முதல்
”மச்சி கவலப் படாத என் மாமா
கம்பெனில ப்ரொஜெச்ட் வாங்கிடலாம்” வரை
நட்புகுள்ள இந்த உணர்ச்சிக்கு ஈடு
செவ்வாயில்தான் தேட வேண்டும்…

சாலையோர தேனீர் கடையில் நின்று
கடந்து போன பெண்கள் முதல்
நாளை வெளிவரப் போகும் புதுப்படம்
வரை  பேசி பேசியே பசியை உண்டு
டீ குடித்தோம் தண்ணீருக்கு பதில்…

எத்தனை தாத்தாக்கள், பாட்டிகள்
இறந்திருக்கிறார்கள் தெரியவில்லை
ஆனால் அத்துனை நாட்களும் நமக்கு
சோகமில்லை, கூடுமிடம் சேராவிடில்
விடுமுறையும் வேண்டாத நாளாக…

இப்படி எழுத இன்னும் எத்தனையோ
நமக்கிடையில் இருந்தாலும் கசிந்த
கண்ணீர் கைகளை கட்டிபோடுகிறது
தூய நட்புக்காக கசிந்ததை கண்கசக்கி
அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை…

அடுத்தமாசம் கேன்சர் சரியாயிடும்…

நவம்பர் 27, 2009 by கவிகுரல்

சாப்பிட்டத் தட்டை தூரே
தூக்கி வீசி தொலைகாட்சியில்
புரூஸ்லியின் முஷ்டியை பதித்து…

எதிர்பட்ட தங்கைக்கு சனியன்
பட்டமளித்து, கீழே கிடந்த
வரலாற்றுப் புத்தகத்தை…

இயில்பின்றி கிழித்து
மின் விசிறிக்கும் மேலே
பறக்க விட்டு பெருமூச்சு விட்டு…

தம்பி பிறந்தநாள் பரிசை
கட்டை விரலால் நசுக்கி, குடி
தண்ணீர் குடத்தை எட்டி உதைத்து…

அலமாறியில் அடுக்கியிருந்த
அத்துனை துணிகளையும்
பார்த்த இடமெல்லாம் அள்ளிவீசி…

தேமேயென நின்றிருந்த மிதிவண்டியை
கீழே தள்ளி, பக்கத்து வீட்டுகாரர்
உட்பட அனைவரையும் சாடி…

கொதித்த நெஞ்சுடன் அமர்ந்த
என்னிடம் நெருங்கிய தந்தை
சொன்ன வார்த்தை இது…

”அடுத்தமுறை டூர் வந்தா போலான்டா
அப்பாவுக்கு அடுத்தமாசம் கேன்சர்
சரியாயிடும்” என்று இருமியபடியே…

முத்தம் இன்றும் காயாமல்…

நவம்பர் 27, 2009 by கவிகுரல்

கலங்கிய மழைக்குட்டையில்
கருமேகம் அண்ணாந்து பார்த்து
கடந்து கால்சட்டையில் இருந்த
காலணா கல்கோணாவை நக்கி
காலார வீடு நோக்கி பயணம்…

வகுப்பறையில் வாங்கிய அடியை
மறந்து வழியெல்லாம் தனியாகபேசிக்
கொண்டே பார்த்த சுவொரொட்டிகளில்
ரஜினியும் கமலும் அவர்களோடு
சண்டையிட்டு பாட்டுபாடி நின்று…

கல்லெத்தி அதை தெரு வரை கொண்டு
வந்தும் பரிசு கொடுப்பாரில்லை, வீடு
நெருங்கியதும் பசி எனனை மீறி
அடுப்பங்கறையில் அம்மாவிடம் தீனி
கேட்டு மன்றாடிக் கொண்டிருந்த்தது…

அன்னம் கொடுத்த தேவதை விறகு
அடுப்போடு கரிக்கும் கன்னத்துக்கும்
வித்தியாசம் தெரியாமல், என் கன்னம்
தடவி ரசித்துக் கொண்டிருந்தது தலை
கோதிய ரேகையில்லா கைகளோடு…

தூக்கிபோட்ட புத்தக பையில் என்
மதிப்பெண் சீட்டு இந்த மாத மதிப்பு
எண்ணோடு, எடுத்து கொடுத்ததும்
வாங்கிய கைகள் அவள் கண்களுக்கு
ஆணையிட்டது ஆனந்த கண்ணீர் விட…

அடுப்போடு இருந்ததாலோ என்னவோ
அவள் அரவணைப்பும் சூடாகவே
கட்டியணைத்து அவள் கூறியது
”என் வயித்தில பால வார்த்தடா…”
முதன் முதலில் உலகம் உள்ளங்கையில்…

ஈரப்பதம் கன்னத்திலொட்ட அப்போது
கிடைத்த முத்தம் இன்றும் காயாமல்…

மரண தண்டனை சாகும் வரை…

நவம்பர் 25, 2009 by கவிகுரல்
குருடர்களின் கண்ணாமூச்சி
ஆட்டத்திற்கு ஊமைதான்
நடுவர் செவிட்டு கூட்டத்திற்கு
நடுவே முடிவு அறிவிக்க…

யார் ஜெயிப்பார் பார்க்க
முடியாது…பார்த்ததை
அறிவிக்க முடியாது…
அறிவித்ததை கேட்கமுடியாது

இதை விதியென்பதா
விரக்தியுடன் விலகி
செல்வதா… விம்மி நின்று
அழுது விடுவதா…புரியவில்லை

ஒரு நொடியில் அத்தனை
வகையான உணர்ச்சிகளும்
ஒருசேர இதயத்தை ஆள
புகையத் தொடங்கியது…

யார் தவறினார் அதை
யார் அறிந்தார் இதையெதையும்
அறியா எனக்கிங்கு மரண
தண்டனை சாகும் வரை…

கண்ணீர் பதிலாக்கி…

நவம்பர் 25, 2009 by கவிகுரல்

எனை விட்டு வெளி வந்த
என்னுயிர் கேட்டது
என்ன மனிதனடா நீ?

வெட்கப்படுகிறேன்
இத்தனை நாள்
உன்னுடன் ஊனோடு…

மறத்த நிலையில்
கண்ணீர் பதிலாக்கி
வாய் மூடி நான்…

அவ்வழி சென்றவர்
வரை கூட்டு சேர்த்து
கொண்டு வையலாயிற்று

செய்வதறியாது நின்ற
என்னை ஏளனமாக
ஏசியே கொன்றது…

எப்படி புரிய வைப்பேன்
உயிர் இல்லாமல்
நான் பிணமென்று…

பிணத்திற்கே உரிய
அமைதி,அடக்கம்
என்னிடம் நிறையவே

ஆனால் உயிருக்குள்ள
எவ்வித உணர்ச்சியும்
உன்னிடம் தென்படவில்லை…

இனிமேல் இருந்தாலும்
ஒன்றுதான், ஒன்றாய்
இல்லாவிடிலும் ஒன்றுதான்

கண் கசக்கி விழித்தபோது
ஒருவன் என் மேலெ
கட்டைகளை அடுக்கியிருந்தான்…

பதறிப்போய் விளக்க
முயன்றபோது நினைவுக்கு
வந்தது நான் பிணமென்று…

முள்ளால் மூடிக் கொண்ட ரோஜா…

நவம்பர் 24, 2009 by கவிகுரல்

முள்ளால் மூடிக்
கொண்ட மலர்ந்த
ரோஜாவே உனக்கு
எப்படி புரிய வைப்பேன்
நான் உன்னை பறிக்க
வரவில்லையென்று…

இதழிதயம் தொட்டு
என் ரேகை வழியின்
வாழ்க்கை முறையை
ஒவ்வொன்றாக கூறி
எடுத்து சொல்லக்கூட
எனக்கு உரிமையில்லையா?

நெருங்கிய இலையார்
நெருடலான காம்பார்
அனைத்து வழிகளிலும்
நெருஞ்சி முள் பாதை
இட்டு நெருங்கா வண்ணம்
இருந்து புரிய மறுக்கிறாய்…

 

நேரடியாக சொல்லிடலாமென
தொட்ட இடமெல்லாம்
முள்ளடியாட்கள் முன்னர் வந்து
கண்ணில்லா என் முகத்தில்
முட்டி கிழித்துமா புரியவில்லை
உனை தொட வந்த விரலென…

எதற்காகவோ…

நவம்பர் 24, 2009 by கவிகுரல்

படிப்பறிவில்லாத
பாவி பிரம்மன்
பாதி மயக்கத்தில்
பதட்டத்தோடு எழுந்து
பலமொழிகளில் எழுத்துப்
பிழையுடன் கிறுக்கியது
என் தலையெழுத்து…

மூடிவைத்துதான்
படிக்கவில்லை
மற்றபடி எல்லா
வகையிலும் படித்து
புரிந்தது, படித்தது
புரியவில்லை
என்பதுதான்…

எப்படியாவது
எதிர்காலத்தை
மாற்றிடலாமென
எத்தணித்த எனக்கு
உதவ வந்த கலை
மகளையும் தடுத்தி
விட்டான் தரங்கெட்டவன்…

நமக்குதான் இப்படியென
நொந்தபோது சேர்ந்த
கூட்டத்தை கூட்டிப்
பார்த்தபோது நாட்டின்
மொத்த மக்கள்தொகை
போன நொடி பிறந்த
குழந்தையோடு சேர்த்து…

அடபோங்கடா என
அலட்சியமாக இருக்க
முடியவில்லை ஆகாச
அளவில் லட்சியம் அப்படி
இருக்க விடவில்லை
அதனால் ஓடிகொண்டு
இருக்கிறேன் எதற்காகவோ…

அம்மனமாக்கப்பட்ட ஞாயம்…

நவம்பர் 24, 2009 by கவிகுரல்

அம்மனமாக்கப்பட்ட ஞாயம்
அசிங்கமாகத் திட்டியப்படியே
ஊர் தேவித் தெருவில் நின்று
பிச்சை எடுத்தப் படியாக
பார்க்கவே பரிதாபமாக…

பார்த்தபடி வீடு சேர்ந்ததும்
கொட்டி கிடக்கும் உமிழப்பட்ட
அமிலவார்த்தைகளை அள்ளி
அடுக்கி வைத்து அதிலேறி
கீழே பார்த்தால் பரந்த வானம்…

பக்கத்து வீட்டுகாரர் சினேகமாக
சிரிப்பதாக நடிக்கிறார் சிரித்த
போது பல்லிடுக்கில் மாட்டிக்
கொண்ட பல மொழிகளின் சுடும்
சொற்களும் சேர்ந்து இழித்தது…

வீட்டினுள் சென்று முகம் கழுவி
கண்ணாடி பார்த்தால் தெரிந்தது
உண்மையோடு கவலையும்
இந்த கண்ணாடிகுள்ள அறிவு
கூட இவர்களுக்கில்லையே…

எப்படியாவது என் உள்ளாடை
நிறம் தெரிய வேண்டி தமது
கற்பனைத் திறனை என்நிழலோடு
அனுப்பியவர்கள் காத்திருந்து
பூசிக் கொண்டது கருப்பு நிறமே…

எத்தனை காவியம் சூழ்ச்சியால்
உருவாகி முடிந்தாலும் படித்ததும்
வெளி வந்து யாரிங்கே தருமன்
என வினவி தங்களையே
துரியோதனனாக தயார் செய்கிறார்கள்…

இதை புரியாமல் ஒருவன் எனை
கேட்பான் அண்ணா இது எதற்காக
இப்படிப்பட்ட உலகில் தினமும்
தர்மத்தை சொல்ல கனவு கண்ட
படித்த பட்டம் பெற்ற ஊமை நான்…

உனக்காக கண்ணீருடன்…

நவம்பர் 24, 2009 by கவிகுரல்

காலசக்கரத்தின்
சாபச் சரித்திரத்தில்
கருப்பு பக்கங்களின்
துரதிஷ்ட எழுத்துக்களாய்
என் பெயர் கிறுக்கலாக…

பார்த்தவரையெல்லாம்
பழகியவெரல்லாம்
பாவியென நினைத்து
பாவச் செல்வம்
சேர்த்த மகாபாவி நான்…

தவறேது செய்தேனென்று
தவறாத தோளெல்லாம்
தவறென நினைத்தது
தவறானதால் தவறிவிழுந்த
தவறே நானாக…

புரியாத புதிரில்
புகுந்திக்கொண்ட என்னை
புரிந்தும் புரியாமலும் தேடி
அலைகிறேன் புரிந்தது
தொலைந்தது உடலன்று…

உலகமியங்குவது உன்
போன்ற உயிர்களாலே
உதிரம் கூட குறையும்
கூடும் உன் அன்பென்ன
மருத்துவ அளவுகோலா…

நன்றியுள்ளாதால்
நாயாவகாவது ஏற்றுக்கொள்
நாகரிகம் தவறி நல்வழி
நகர்ந்து நடந்தது
நானன்று நம் விதியே…

இருளின் இதிகாசத்தில்
சூழ்ச்சி அத்தியாயத்தில்
கொடூரமான பாத்திரத்தில்
வேஷம் தெரியாமாலே
நடித்துக் கொண்டிருக்கிறேன்…

தேடி தேடியே தொலைத்த
என்னை யார் கண்டுபிடிப்பார்
நீ விலகியதை உணர்ந்த போது
பூமி பந்து என் முன்னே ஒரு
நீலநிற கோளி உருண்டையாய்…

குற்றம் சொல்லி சொல்லியே
குற்றவாளியான எனக்கு
குறைந்தபட்ச தண்டனையென
குற்றுயிராக்கினாலும்
குற்றம் என்னுடையதல்ல…

காத்திருப்பேன் உனக்காக
நீ வரும்வரை, ஏற்றிவிட்ட
படிகளை கால் பட்டதற்காகவே
கண்ணீராலே கழுவுபவன் நான்
இன்று உனக்காக கண்ணீருடன்…